Home » » "தோழியின் மகனுடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து தீர்த்தார் மனைவி!"

"தோழியின் மகனுடன் கள்ளக்காதல்... கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து தீர்த்தார் மனைவி!"

Written By WeAreIndians on Thursday, 21 November 2013 | 03:34


சென்னை: தோழியின் மகனுடன் கள்ளக்காதலில் திளைத்தார் ஒரு பெண். அதைக் கணவர் கண்டித்தார். இதை கள்ளக்காதலனிடம் சொல்லி அழுதார் அப்பெண். அவர் கூலிப்படையை ஏற்பாடு செய்தார். இதற்கு காதலியும் சம்மதித்தார். கடைசியில், கூலிப்படையினர், அப்பெண்ணின் கணவரைக் கொன்றனர். இப்போது, மனைவியும், கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளிகளை ஏற்பாடு செய்த கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தவர் ராஜ்குமார். 29 வயதான இவரது மனைவி பெயர் வித்யா. இவருக்கு 27 வயதாகிறது.
இருவரும் போரூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் காதலித்து மணந்தவர்கள். பெற்றோர் சம்மதித்து திருமணம் செய்து வைத்து அழகு பார்த்தனர். இந்தத் தம்பதிக்கு அழகான 6 வயது பெண் குழந்தையும் உள்ளது.
வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டார். தனது கணவரைக் கொன்று விட்டு தனது நகைகளை சிலர் கொள்ளையடித்து விட்டுப் போய் விட்டதாக அழுது கூப்பாடு போட்டார் வித்யா. இதை முதலில் போலீஸாரும் நம்பி விட்டனர். கொலை, கொள்ளை என்று வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த நிலையில், இன்று காலை நான்கு பேர் மோட்டார் சைக்கிள்களில் நல்ல குடிபோதையில் வந்தனர். அவர்களை மதுரவாயல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவர்களது சட்டையில் ரத்தம் காணப்பட்டது. இதையடுத்து நான்கு பேரையும் முறைப்படி விசாரித்தபோது பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன.
இந்த நால்வரும் கூலிப்படையினர். இவர்கள்தான் ராஜ்குமாரைக் கொன்றவர்கள். இவர்களை ஏவியது மணிகண்டன். இவர்தான் வித்யாவின் கள்ளக்காதலன். இந்தக் கொலைக்கு வித்யாவும் உடந்தை.
காஞ்சிபுரத்தில் ஆரம்பித்த கதை..
ராஜ்குமாரின் சொந்த ஊர் காஞ்சிபுரம். அங்கு ஒருமுறை கணவருடன் வி்த்யா போயிருந்தபோது ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இவர் போரூரில்தான் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு போரூரிலும் தொடர்ந்தது.
இந்தப் பெண்ணின் மகன்தான் மணிகண்டன். இவருக்கு 28 வயதாகிறது. தோழி வீட்டுக்குப் போகும்போது அவரது மகனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார் வித்யா. இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திக்க ஆரம்பித்தனர். பாதை மாறிப் போக ஆரம்பித்தனர் இருவரும்.
ராஜ்குமாருக்கு விஷயம் தெரிந்து அதிர்ந்தார். மனைவியைக் கண்டித்தார். ஆனால் வித்யா காதில் அது ஏறவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ராஜ்குமாருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் இருந்தார்.
இந்த நாட்களில் வித்யாவுடன் தங்கியுள்ளார் மணிகண்டன். இதை ராஜ்குமார் விரும்வில்லை. மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
கணவர் கண்டித்ததைத் தாங்கிக் கொள்ள முடியாத வித்யா, மணிகண்டனிடம் அழுது புலம்பினாராம். அவரும் ஆறுதல் கூறி, ராஜ்குமாரைத் தீர்த்துக் கட்டி விடுவோம் என்று யோசனை கூறியுள்ளார். அதை வித்யாவும் ஏற்றுள்ளார்.
இதையடுத்து துரை என்ற பழைய குற்றவாளியை பிடித்தார் மணிகண்டன். இவ்வளவு பணம், ராஜ்குமாரைத் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அவரிடம் பேசியுள்ளார் மணிகண்டன். இதையடுத்து தனது கூட்டாளிகள் செந்தில், பெருமாள், ஸ்ரீதர், சரவணன் ஆகியோரை கொலை செய்ய ஏவியுள்ளார் துரை.
மனைவி காலைப் பிடிக்க.. கழுத்தை அறுத்துக் கொலை
கொலை செய்ய ஆட்கள் வருவதை முன்கூட்டியே வித்யாவுக்கு போன் போட்டு சொல்லி விட்டார் மணிகண்டன். வித்யாவும், கணவரைக் கொன்று விட்டுப் போவதற்கு வசதியாக வாசற் கதவை நன்றாக திறந்து வைத்துள்ளார்.
இதையடுத்து உள்ளே வந்த கூலிப்படையினர் ராஜ்குமாரை கொல்லும முயற்சியில் இறங்கினர். கட்டிய மனைவியான வித்யா, கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொள்ள நான்கு பேரும் சேர்ந்து காய்கறி நறுக்கும் கத்தியால் ராஜ்குமார் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர் வித்யா கழுத்தில் கிடந்த நகைகளை ஒப்புக்காக திருடிக் கொண்டு போய் விட்டனர். வித்யாவும் படுக்கை அறைக்குள் போய் படுத்துக் கொண்டார். காலையில் எழுந்ததும் டிராமா போட்டு ஊரைக் கூட்டினார்.
ஆனால் கூலிப்படையினர் சிக்கியதைத் தொடர்ந்து வி்த்யாவின் நாடகம் முடிவுக்கு வந்தது. போலீஸார் தற்போது மணிகண்டனைத் தேடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment